எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும்

தினமலர் ஏன் இப்படி செய்கிறது

சமீபகாலங்களில் தினமலர் வலைத்தளங்களில் அடிபடுவது வாடிக்கையாகிவிட்டது. தினமலர் ஒவ்வொரு முறையும் தனது தரத்தை தாழ்த்திக் கொள்ளும் போதெல்லாம் நமது தமிழ் வலைப்பதிவர்கள் அதனை தோலுரித்து அதன் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள். தினமலரும் தான் செய்வது தவறு என்று தெரிந்தே செய்கிறது. தனது தரம் தாழ்ந்த செய்திகளை எதிர்ப்பு கிளம்பியவுடன் தனது வலையில் இருந்து நீக்குவதில் இருந்தே தான் வெளியிட்ட செய்தி அல்லது படைப்பு பலரின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறது. ஆனாலும் அதை மறந்துவிட்டு தனது அடுத்த தரம் தாழந்த செயலை வெகுவிரைவிலேயே அரங்கேற்றுகிறது

நேற்றைய அதன் செய்தி ஒன்றில் தமிழ் உணர்வாளர்களையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு படைப்பை தனது சிறப்பு நிருபர் என்ற பெயரில் வெளியிட்டு இருந்தது. இதனை பலர் வஞ்சப்புகழ்ச்சி பாணியில் இருப்பதாக நினைத்து வருத்தப்பட்டு இணையத்தில் எழுதி இருந்தார்கள். மேலோட்டமாக பார்த்தால் அந்த செய்தி சோ ராமசாமி போன்றவர்கள் பாணியிலான நக்கல் நடையில் இருப்பதாக தோன்றினாலும் அந்த செய்தியின் பின்னே தினமலரின் பல நோக்கு திட்டங்கள் புதைந்து கிடக்கின்றன. இவை எல்லாம் ஏதோ தெரியாமல் செய்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தையும் தினமலர் அந்த செய்தி மூலம் நிறுவ முயற்சி செய்கிறது

அந்த செய்தியின் மூலம் தினமலர் நிறைவேற்ற துடிக்கும் முதல் நோக்கம் அடையாளப்படுத்துவது. இதை எளிய மொழியில் சொல்ல வேண்டுமானால் தமிழ் சினிமாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தமிழ் சினிமாவில் நெல்லைப் பகுதியில் கதை நடப்பது போல் எடுக்க வேண்டும் என்றால் தேவை இல்லாமல் பாத்திரங்கள் "எலே" என்ற சொல்லை பயன்படுத்துவது போல் பல இடங்களில் புகுத்தி இருப்பார்கள். ஆனால் உண்மைக்கும் சினிமாவிற்கும் வெகு தூரம் இருக்கும். அதே மாதிரி தான் இங்கே பாலியல் பலாத்காரம் புரிந்த ஒருவரை அவர் தமிழர் என்று அடையாளப்படுத்த முயல்கிறது. வெறுமனே அவரை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் தனது கோர முகம் வெளிப்பட்டுவிடுமே என்று அவரை தலித் என்றும் மாற்றுத் திறனாளி என்றும் பரிதாபம் கொள்வது போல் பூசி மெழுகுகிறது

தினமலரின் இரண்டாவது நோக்கம் கொச்சைப்படுத்துவது. தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதில் தினமலர் என்றுமே வெட்கப்படுவதில்லை. தமிழ் உணர்வாளர்கள் மொழி உணர்வை தூண்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் தினமலர் மத உணர்வை தூண்டும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.இன் தீவிர கைப்பாவை என்பது உலகறிந்த உண்மை. செங்கொடி தீக்குளித்து மாண்ட போது அவரை காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று கொச்சைப்படுத்திய தினமலர் இப்போது ஒரு பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்காக தமிழ் உணர்வாளர்கள் போராட வேண்டும் என்று அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது

ஆனால் முன்னே மாதிரி தினமலரால் தனது விஷத்தை கக்கிவிட்டு நிம்மதியாக இருக்க முடிவதில்லை. நம் தமிழ் பதிவர்கள் உடனுக்குடனேயே தினமலரி சதித் திட்டங்களை அம்பலப்படுத்தி வருகிறார்கள். எங்கே இவர்கள் மேலும் மேலும் விழிப்புணர்வு பெற்றுவிடுவார்களோ என்று அஞ்சியே அண்ணா நூலகம் இடமாற்றம் போன்ற அறிவை முடக்கும் செயல்களை முன்னின்று ஊக்கப்படுத்தி வருகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை